அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

அடுத்த ​தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஏனைய உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (11ஆம் திகதி) பிற்பகல் 2 மணியளவில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் காலம் தாழ்த்தப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் நிலவும் சட்ட நிலைமை குறித்து அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் அறிவுறுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த சந்திப்பின்போது வாக்காளர் இடாப்பு திருத்த நடவடிக்கை தொடர்பிலும் கட்சிகளின் செயலாளர்கள் அறிவுறுத்தப்படவுள்ளனர்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், வாக்களிப்பு இடம்பெறாத எல்பிட்டிய பிரதேச சபை தொடர்பிலும் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து இலங்கையர்களையும் வாக்காளர் இடாப்பில் தமது விபரங்களை பதிவு செய்யுமாறு குறுந்தகவல் மூலம் அறிவிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்காக 15 வயது பூர்த்தியானவர்களின் விபரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த பட்டியலுக்கு இணங்க 18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் இடாப்பில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி குறுந்தகவல் அனுப்பப்படவுள்ளன.