இலஞ்ச குற்றவாளிக்கு பொது மன்னிப்பு வழங்கினார் ஜனாதிபதி



இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டி​ல் 18 வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியொருவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரக்காபொல பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கே இவ்வாறு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் குற்றவாளியை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

1995 ஆம் ஆண்டு வரக்காபொல பிரதேசத்தில் 3 வீதிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, ஒப்பந்தக்காரர் ஒருவரிடமிருந்து 25,000 ரூபாய் இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டின் கீழ், கைதுசெய்யப்பட்ட இவருக்கு, மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அரசமைப்பின் 34 (இ) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.