இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழந்த விசாரணை CID யினரிடம்



மட்டக்களப்பு வைத்தியசாலையில் இரத்தம் மாற்றி ஏற்றியதால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்குமாறு என மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எ.சி. றிஸ்வான் பணித்துள்ளார். 

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த 9 வயதுடைய ஜெயக்காந்தன் விதுலஷ்சன் என்ற சிறுவன், கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி விபத்தில் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அங்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகளின் போது, அவருக்கு இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. அதன் பின்னர் காயம் தீவிரமடைந்தமையினால், அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து சுகமாகி வந்த சிறுவன், மீண்டும் நோய் வாய்ப்பட்டுள்ளார். அதனை அடுத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட சிறுவனின் கிட்னி பகுதியில் சிறிய கசிவு ஏற்றப்பட்டுள்ளதாகவும் எனினும் அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

அதன் பின்னர் அவரது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக பெற்றோர் வைத்தியரிடம் விசாரித்துள்ளனர். இரத்தம் மாற்றி ஏற்றியதால் தான் கிட்னி இரண்டும் பாதிப்படைந்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்ததாக உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் தெரிவித்திருந்தனர். 

அத்தோடு, இந்த விடயம் தொடர்பாக 18 ஆம் திகதி தனக்கு தெரிய வந்ததாகவும் தனது மகன் 19 ஆம் திகதி உயிரிழந்ததாகவும் தெரிவித்திருந்தனர். 

மேலும் இரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதாலேயே தனது மகன் மரணித்ததாக பொலிஸாருக்கு அறிக்கை வழங்கியுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகவும் உயிரிழந்தவரின் தந்தை தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு கடந்த மாதம் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போது பொலிஸார் வழங்கிய அறிக்கைகள் திருப்தியளிக்காத நிலையில் முழுமையான அறிக்கையினை இன்று நீதிமன்றுக்கு வழங்குமாறும் அது திருப்தி அளிக்காவிட்டால் குறித்த வழக்கினை குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எச்சரித்திருந்தார். 

அதன் அடிப்படையில் குறித்த வழக்கு இன்று காலை புதன்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எ.சி.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரின் முழுமையான அறிக்கை திருப்தியளிக்காத நிலையில் வழக்கினை பிற்பகல் வரைக்கும் ஒத்திவைத்தார். 

எனினும் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும் குறித்த தமது விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை அதிகாரிகள் வழங்கவில்லை எனவும் பொலிஸாரினால் மன்றுக்கு தெரிவிக்கப்பட்டது. 

அனைத்தினையும் கருத்தில் கொண்ட நீதிபதி குறித்த வழக்கில் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் விசனம் தெரிவித்துடன் வழக்கினை குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றுவதாக பணிப்புரை விடுத்ததுடன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைப்பதாக அறிவித்தார். 

இதேவேளை, பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் நீதிவான் கடுமையாக எச்சரிக்கைகளை செய்ததாகவும் பொலிஸ் உயரதிகாரிகள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையென நீதிமன்றின் கவனத்திற்கு இது தொடர்பில் விசாரணை செய்யும் பொலிஸ் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டதாக இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு குறித்த குடும்பத்திற்கு உதவி வரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் கே. கௌரி தெரிவித்தார்.