கம்பெறலிய திட்டத்தின் கீழ் கொக்குவில் பாடசாலை வீதியானது கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொக்குவில் ‘யு’ வலய பாடசாலை வீதியானது கம்பெறலிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பக்கப்பட்டுள்ளன.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சினால் தற்போது நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கம்பெறலிய துரித கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசனின் 1.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேற்படி வீதி அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

கொக்குவில் சனசமுக நிலையத்தினருடன் இணைந்து மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்களான க.ரகுநாதன், இரா.அசோக், மாநகர பொறியிலாளர் திருமதி. சித்திராதேவி லிங்கேஸ்வரன், கொக்குவில் பகுதிக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் சு.பாலசந்திரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.