தீவிரவாதியின் உடற் பாகங்களை அனுமதியின்றிப் புதைத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை - மாநகர சபையில் தீர்மானம்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதியின் உடற் பாகங்களை மாநகர சபையின் அனுமதியின்றி கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான பிரேரணையானது மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 22 ஆவது அமர்வானது நேற்றைய தினம் (05.07.2019) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு  உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன.

இவ் அமர்வின் விசேட அம்சங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான திரு.துரைசிங்கம் மதன் மற்றும் திரு.விஜயகுமார் பூபாலராஜா ஆகியோரால் ஒருமித்து கொண்டு வரப்பட்ட மாநகர சபைக்குச் சொந்தமான கள்ளியங்காடு இந்து மயானத்தில் முறையான அனுமதி பெறப்படாது புதைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய பயங்கரவாத குண்டுதாரியின் உடல் பாகங்களை மாநகர எல்லைக்குள் புதைப்பதை தடை செய்தல் தொடர்பாக பிரேரணை ஒன்றும் சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் திரு.இராசலிங்கம் அசோக் அவர்களால் முன்வைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதியின் உடற் பாகங்களை மாநகர சபையின் அனுமதி பெறாது கடந்த 26.08.2019 அன்று மாநகர சபைக்குட்பட்ட கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் எனும் பிரேரணையானது பலதரப்பட்ட வாதப்பிரதிவாதங்களின் பின் முதல்வரால் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு ஆதரவாக 15 வாக்குகளும், எதிராக 09 வாக்குகளும், நடுநிலையாக 13 வாக்குகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.