தமிழர்கள் தலைநிமிர்ந்து தன்மானத்துடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு த.தே. கூ சிறந்த தலைமைத்துவமல்ல



(வி.சுகிர்தகுமார்)
தீப்பாய வேண்டுமானால் பரிசுத்தமாக இறைவனின் சிந்தனையுடன் இருக்கவேண்டும். அவ்வாறானவர்கள் மாத்திரமே தீப்பாயமுடியும். எல்லோரும் பாய்கின்றனர் நாமும் பாய்வோம் என நினைப்பவர்களால் அது முடியாது.

அது போலவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் எவ்வித நன்மையும் தமிழருக்கு பெற்றுக் கொடுக்கமுடியாது. குறைந்தது ஒரு பிரதேச செயலகத்தை  தரமுயர்த்துவது மாத்திரமல்ல ஒரு சமுர்த்திமுத்திரையையும் பெற்றுக்கொடுக்க முடியாதவர்களே இவர்கள் என அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் உள்ள பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் நேற்று  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் 
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏமாற்று அரசியல் நடவடிக்கைகள் முடிவிற்கு வந்திருக்கின்றது. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்தநாட்டிலே என்பது போன்று அவர்களது செயற்பாடுகள் யாவும் முற்றுப் பெற்றுவிட்டது.

மக்கள் இன்று வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையிலும்; எவ்வித உணர்வுமின்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் வருகின்ற அரசுக்கெல்லாம் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி  வருகின்றனர்.

இதனால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை. இந்த அரசியல் பித்தலாட்டத்தை 1977ஆம் ஆண்டு முதல் அறிந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரை மற்றும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனகரெத்தினம் திவ்வியநாதன் போன்றவர்கள் மக்களுக்கு எடுத்து கூறியபோதும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

கெடுவாய் கேடு நினையாதே தானே வரும் கேடு என்பதுபோல் இன்று தமிழனத்தின் நிலை வந்துள்ளது. இவையனைத்திற்கும் நாம் முடிவு காண வேண்டுமானால் வருகின்ற தேர்தலில் பொதுஜன பெரமுனகட்சியில் வேட்பாளர் கோத்தபாயவிற்கு வாக்களித்து அம்பாரை மாவட்டமக்களின் இருப்பை பாதுகாப்போம் என்றார்.

தமிழர்கள் தலைநிமிர்ந்து தன்மானத்துடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு தமிழத்தேசிய கூட்டமைப்பு சிறந்த தலைமைத்துவமல்ல. இதற்கான சரியான தலைமைத்துவம் மகிந்த ராஜபக்ஷ எனும் கட்சியின் தலைமையும் தெரிவு செய்யப்போகும் தாமரை மொட்டின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயாவுமே என்றார்.

நுமக்கு தற்போது தேவைப்படுவது சிறந்த அரசியல் பலம் மாத்திரமே. ஆகவே நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். வருங்காலம் நல்லகாலமாக இருக்கட்டும். அதற்காக தாமரைமொட்டிற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக வாக்களித்து நாம் இழந்த அனைத்தையும் பெற்றுக்கொள்வோம் என்றார்.