சாதாரண தர பரீட்சைக்கு சென்ற மாணவியை பாம்பு தீண்டியதில் கவலைக்கிடம்



சாதாரண தர பரீட்சையில் தோற்றுவதற்காக பரீட்சை நிலையத்திற்கு தன்னுடைய வீட்டில் இருந்து காட்டுவழியாக பயணித்த மாணவி ஒருவரை பாம்பு தீண்டியதில் கவலைக்கிடமான நிலையில் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி மஹிங்கனை கல்வி வலயத்திற்குட்பட்ட அராவ வித்தியாலயத்தில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்திற்கு இன்று (04) காலை சென்றுகொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரிதிமாலியந்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பெரலிய எனும் மிகவும் பின்தங்கிய கிராமத்திற்கு பிரதான வீதியில் இருந்து 3 கிலோ மீட்டர் அடர்ந்த காட்டு வழியாக செல்ல வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாதை வழியாக குறித்த சிறுமி பிரதான வீதிக்கு வந்து கொண்டிருந்த போது இவ்வாறு பாம்பு தீண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வித அடிப்படைய வசதிகளும் அற்ற இந்த கிராமத்தில் தற்போது மூன்று குடும்பங்கள் மாத்திரமே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர் மக்கள் .

சம்பவத்தை தொடர்ந்து குறித்த மாணவியையும் அவளுடைய உறவினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.