மட்டக்களப்பு வைத்தியசாலையின் ஊழியர்கள் பாராட்டுக்கு உரித்தானவர்கள் - மட்டு மறைமாவட்ட ஆயர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், வைத்திய உதவியாளர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், தாதியர்கள், மருத்துவ மாதர்கள், மருந்தாளர்கள், மருத்துவ உதவியாளர்கள், ஊழியர்கள், சிற்றுழியர்கள், வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கலாரஞ்சனி கணேசலிங்கம் மற்றும் நிருவாகத்தினரின்

அர்பணிப்புமிக்க தியாக சிந்தனை மற்றும் கருணை மிக்க பணியினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, சிவில் சமூக அமைப்பினர், அதன் போசகரான மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை ஆகியோர் மனதார பாராட்டினார்கள்.

நமது மக்கள் வழமையில் விமர்சனங்களை மாத்திரம்தான் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதும் முகநூல்களில் உண்மையை ஆராய்ந்து பார்பதற்கு கூட நேரம் இன்றி தங்குதடையின்றி பதிவதும் மற்றவர்களுடன் உரையாடிக்குகொள்வதாகவே நமது வழக்கமாக உள்ளது.

அதற்கு மாறாக இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அர்பணிப்பான சேவையினை நாம் கண்டுகொள்ளாதவர்களாக இருந்துவிடக்கூடாது. அரசசேவையாளர்தானே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது அவர்கள் வேலைசெய்யத்தான் வேண்டும் என்று கூறலாமா?

இன்றையகாலகட்டத்தில் அவர்களும் மனிதர்கள்தான் அவர்களுக்கும் குடும்பம் என்ற ஒன்று உள்ளது. நாம் வைத்தியசாலைக்கு செல்ல பயப்படுகின்ற காலத்தில் அவர்கள் அங்கிருந்து பணியாற்றுவது என்பது ஒருவகை அர்பணிப்பாகும். அற்காகவே நாம் அவர்களை பாராட்டுகின்றோம் என குறிப்பிட்டனர்

அர்பணிப்புடன் தங்களின் குடும்பம் குழந்தைகளை எல்லாம் மறந்து 24 மணித்தியாலமும் விடுதிகளில் தங்கியிருந்து தங்கள் பணியினை ஆற்றிவருகின்றனர். அவர்களுக்கான உணவுக்குகூட வீடுகளுக்கு செல்லமுடியாதவர்களாக உள்ளனர்.

அதற்காக பணிப்பாளரின் சிறப்பான செயற்பாட்டினால் அவர்களுக்கான உணவு, விடுதி ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இதனைத் தவிரவும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தினூடாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்பு உணவுக்குத் தேவையான உதவியை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிவில் அமைப்பின் உறுப்பினர் எஸ்.மாமாங்கராஜா தெரிவித்தார்.

நமது மக்களுக்கு முக கவசங்களை பாவிக்கும் படியாக சுகாதார தரப்பினர் பணிக்கின்றபோதும், அதனை சில மணி நேரம்கூட அணிவதற்கு தயாரில்லாதபோது இந்த அர்பணிப்பு மிக்க வைத்தியசேவையினை வழங்கிவருகின்ற வைத்தியர்களும் தாதியர்களும் பாதுகாப்பு அங்கியினை தொடர்ந்து 12 மணித்தியாலமாக அணிந்து கொண்டு தங்களின் கண்ணியமான பணியினை தங்கள் உயிரையும் மதிக்காது சேவையாற்றுவது இறைவனுக்கு இணையான சேவை என மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் பாராட்டி புகழ்ந்தனர்.