தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் வயலிருந்து சடலமாக மீட்பு


(க.விஜயரெத்தினம்)
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தாமோதரம்-மனோகரன் இன்று ஞாயிற்றுக்கிழமை(24)மாலை காலமானார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தாமோதரம் மனோகரன் காலமாகியுள்னார்.45 வயதான அவர் 3 பிள்ளைகளின் தந்தையாவர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (24) மாலை அவர் சங்கர்புரம் கிராமத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு றாணமடு பகுதியிலுள்ள வயலுக்குச் சென்றுள்ளார். வயலுக்குச் சென்றவர் மாலை வேளையாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் வயலுக்குச் சென்று பார்த்தவேளை அவர் வீழ்ந்து கிடந்துள்ளார்.பின்னர் உடனடியாக களுவாஞ்சிகுடி வைத்தியாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மனோகரன் அவர்கள் நெஞ்சு வலி தொடர்பாக சிசிச்சை பெற்று வந்துள்ளார். இவர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் மரணத்திற்கான உறுதிப்படுத்தப்பட்ட காரணம் பிரதே பரிசோதனையின் பின்னர் தான் தெரியவரும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சடலம் தற்போது களுவாஞ்சிகுடி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தாமோதரம் மனோகரன் அவர்கள் தமது கிராமத்தில் கல்வியின் வளர்ச்சிக்காக மும்முரமாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு தமது கிராமத்தை ஒரு கல்விக்கிராமமாக மாற்றிய பங்கு இவருக்குண்டு. இவர் சமூக, சமய சிந்தனையுடன் கிராமத்தில் வினைத்திறனுடனும் துடிப்போடும் செயற்பட்ட மனிதப்பண்பாளராகவும் திகழ்ந்தார். அதன் பின்னர் கடந்த உள்ளுராட்சி(2018)மன்றத் தேர்தலில் சின்னவத்தை வட்டாரத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, அப்பகுதி மக்களுக்குத் திறம்படச் சேவையாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனின்(பிள்ளையான்) கிழக்கு தமிழர்களின் அபிவிருத்தி, இருப்பைக் ஏற்றுக்கொண்ட பிரதேச சபை உறுப்பினர் ஆவார்.