ஐ.தே.கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 ஆசனங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புள்ளது - மங்கள சேனரத்

(ருத் ருத்ரா)
இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் ஜக்கிய தேசிய கட்சியானது 2 பாராளுமன்ற உறுப்பினர்களை தன் வசம் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புள்ளதாக கல்குடாத் தொகுதியின் ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும் வேட்பாளருமாகிய தேசமான்ய மங்கள சேனரத் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வாழைச்சேனையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தை இலங்கையிலேயே ஒரு மாதிரி மாவட்டமாக அபிவிருத்தி செய்வதே தனது நோக்கமாகும். வறுமையிலிருந்து மட்டக்களப்பை மீட்க வேண்டும், 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கவுள்ளதாகவும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்து அதனையும் வெளியிட்டார்.

தான் சார்ந்த கட்சியானது ஜனாதிபதி தேர்தலின் போது மக்களுடான அர்பணிப்பு சேவை தொடர்பாக தம்மை அடையாளம் கண்டு மாவட்ட அமைப்பாளராக நியமித்தனர். இதன் மூலம் பல சவால்களை எதிர்கொண்டேன். எனது திறமையினால் அதனை சூழலுக்கு ஏற்றால் போல் சாதகமாக மாற்றிக் கொண்டேன். இதன்போது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வறிய நிலையில் வாழும் மக்கள் மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்கியிருந்தேன். அதன் நிமித்தம் எனது சேவையனை அறிந்து கட்சியானது என்னை மீண்டும் இங்கு வேட்பாளராக நியமித்துள்ளனர்.

எனவே இதன் மூலம் இவ் மாவட்ட மக்களுக்கு சேவையாற்ற தயாரகவுள்ளேன் என தெரிவித்தார். இந் நிகழ்வில் மாவட்டத்தில் ஜக்கிய தேசிய கட்சியின் மூலம் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.