பொதுத் தேர்தலுக்கு 1000 கோடி ரூபா செலவாகலாம்: மஹிந்த தேசப்பிரிய


இம்முறை பொதுத் தேர்தலுக்கு சுமார் 1000 கோடி ரூபா செலவாகலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை ஜுலை மாதம் 13, 14 , 15, 16, 17 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாமற்போவோருக்கு ஜுலை 20 , 21 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்குச் சீட்டுகளில் புள்ளடியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இம்முறை பொதுத் தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் தேர்தல் நாளான ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறாது என்பதுடன் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி காலை 8 மணி முதல் வாக்கெண்ணும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, முதலாவது தேர்தல் முடிவை ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி பிற்பகல் 4 மணியளவில் வௌியிட முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் சட்டத்தை மீறுகின்ற வேட்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.