இன்று முதல் ஓட்டமாவடி பொது நூலகம் இயங்கவுள்ளது

(எச்.எம்.எம்.பர்ஸான்)
கொவிட்- 19 காரணமாக மூடப்பட்டிருந்த ஓட்டமாவடி பொது நூலகம் இன்று முதல்(ஜூலை 01) இயங்கவுள்ளதாக நூலகர் ஏ.ஏ.கமால் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோரின் வழிகாட்டலுக்கு அமையவும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஆலோசனைக்கு அமைவாகவும் இன்று முதல் வழமை போன்று பத்திரிகை வாசிப்பு, உசாத்துணை, நூல் இரவல் வழங்கல் ஆகிய அனைத்துப்பகுதிகளும் இயங்கவுள்ளதாக தெரிவித்தார்.

அத்தோடு, குறித்த நூலகத்தை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பார்வையிட்டு, நூலகத்தை பொதுமக்கள் பயன்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் தொடர்பாகவும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

எனவே, நூலகத்திற்கு வருகை தரும் அனைவரும் சுகாதார அறிவுறுத்தல்களைப் பேணி முகக்கவசங்கள் அணிந்து வருவதோடு, சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களை அவசியம் கடைப்பிடிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.