கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி எதிர்வரும் இத்தேர்தலில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்


(பாறுக் ஷிஹான்)
2020 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சகல ஒழுங்குகளும் பூரணப்படுத்தப்பட்டுள்ளதுடன் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி எதிர்வரும் இத்தேர்தலில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.

2020 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்ட நிலைமை தொடர்பாக வெள்ளிக்கிழமை(31) மாலை அம்பாரை மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

அம்பாரை (திகாமடுல்ல) மாவட்டத்தின் 513979 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் அம்பாரை (திகாமடுல்ல) மாவட்டத்தின் அம்பாரை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய நான்கு தொகுதிகளிலும் 513979 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாரை தேர்தல் தொகுதியில் 1 லட்சத்து 77ஆயிரத்து 144 பேரும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில்90 ஆயிரத்து 405 பேரும் , கல்முனை தேர்தல் தொகுதியில்77ஆயிரத்து 637பேரும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 793 பேரும் 2019 ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்கள் வாக்களிக்கவென 525 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தொகுதி வாரியாக அம்பாரை தேர்தல் தொகுதியில் 181 வாக்கெடுப்பு நிலையங்களும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 93 வாக்கெடுப்பு நிலையங்களும், கல்முனை தேர்தல் தொகுதியில் 74 வாக்களிப்பு நிலையங்களும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 177 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

எனவே கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி எதிர்வரும் இத்தேர்தலில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.