மாணவி கடத்தல் விவகாரம்: முறைப்பாடு செய்ய சென்ற இடத்தில் மாணவியைத் தாக்கிய பொலிஸ்!

15 வயது பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று மீளவும் கொண்டு வந்து விட்டமை தொடர்பில் மாணவியின் முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஒருவர், மாணவியைத் தாக்கியுள்ளார்.

மாணவி நேற்று காலை 7.30 மணியளவில் பாடசாலைக்குச் சென்ற போது, கோண்டாவில் இ.போ.ச சாலை முன்பாக ஒருவரால் மோட்டார் சைக்கிளிலில் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் மாலை 3.30 மணியளவில் மாணவி மீளவும் அதே இடத்தில் கொண்டு வந்து இறக்கிவிடப்பட்டுள்ளார். மாணவியால் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கடத்திச் சென்றவர் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவர் என்று அறிய முடிகின்றது.

சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டை வழங்க மாணவியின் தாயார், மாணவியுடன் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று மாலை சென்றுள்ளார். அங்கு சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வைத்த குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, மாணவியைத் தாக்கியுள்ளார். அத்தோடு முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸ் அதிகாரி மாணவியையும் அவரது தாயாரையும் திருப்பி அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மாணவியின் வீட்டுக்கு நேற்று இரவு சென்று முறைப்பாட்டை வழங்க வருமாறு கேட்டுள்ளார். எனினும் மாணவியின் தாயார் மற்றும் கிராம மக்கள் பொலிஸாரின் செயலைக் கண்டித்ததுடன் முறைப்பாடு வழங்க பொலிஸ் நிலையம் செல்ல மறுத்தனர்.