மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு நால்வர் காயம்!

(ஏறாவூர் நிருபர்)
மட்டக்களப்பு- மாவடிவேம்பு பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று(21) திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில் சித்தாண்டி நாவலர் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய பி.சதீஸ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சித்தாண்டியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு முன்பாக தெருநாயுடன் மோதி கட்டுபாட்டை இழந்து எதிர்த் திசையில் மூன்றுபேர் பயணத்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இவ்விபத்தில் மூவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.