சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறும் வீரர்கள் குறைந்தபட்சம் 15 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் !

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறும் வீரர்கள் குறைந்தபட்சம் 15 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்கிற புதிய விதிமுறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமைப்பு அமல்படுத்தியுள்ளது

சமீபத்தில் இடம்பெற்ற ஐசிசி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆடவர் / மகளிர் ஐசிசி போட்டிகள், இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள், யு-19 போட்டிகள் என அனைத்திலும் பங்குபெற ஒரு வீரர் குறைந்தபட்சம் 15 வயதை எட்டியிருக்க வேண்டும் என ஐசிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இளம் வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேசமயம் ஓர் அணி நினைத்தால் எந்த வயதிலும் ஓர் வீரரை அறிமுகப்படுத்த முடியும். அதற்கு ஐசிசியிடம் அந்த அணி அனுமதி பெறவேண்டும். அசாதாரணமான சூழலில் 15 வயதுக்குட்பட்ட வீரரை அணியில் சேர்க்க வேண்டும் என்றால் ஐசிசியிடம் விண்ணபிக்க வேண்டும். அந்த வீரரின் அனுபவம், மனநிலை, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தகுதி போன்றவற்றை ஐசிசிக்குத் தெரிவிக்க வேண்டும் என்று புதிய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.