மட்டக்களப்பில் பிக்குவின் ரவுடித்தனம் ! குழப்பம் விளைவித்ததுடன் அச்சுறுத்தலும் விடுத்தார்.

 



(ரூத் ருத்ரா)

மட்டக்களப்பு றிதிதென்னப் பகுதியில் ஓமடியாமடு கிராம மக்களினால் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்திற்கு குழப்பம் விளைவிக்கும் நடவடிக்கையில் அப்பகுதியின் தேரர் ஈடுபட்டார்.
அத்துடன் வாழைச்சேனை பொலிசார் மற்றும் இராணுவத்தினரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர்களை கொரோனா தொற்றினை காரணம் காட்டி குறித்த இடத்தினை விட்டு கலைந்து செல்லும்படி பணித்தனர்.

இதேவேளை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துக் கொண்டிருந்த மக்களை திடீரென உள் நுழைந்த ஓமடியாமடு சுதுகல பன்சாலையின் கடவத்த மடுவே சுபோதாலங்கார தேரர் மண் ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த பத்மன் எனும் நபருக்கு ஆதரவு தெரிவித்தும் நியாயப்படுத்தியும் குழப்பம் விளைவித்ததுடன் அச்சுறுத்தலும் விடுத்தார்.

குறித்த தேரர் மண் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் ஓமடியாமடு பிரதேசத்தில் பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் ஓமடியாமடு பிரதேசத்தில் இரவு பகலாக மணல் ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.இதன்போது மணல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களினால் ஓமடியாமடு பிரதான வீதியானது சேதமடைவதாகவும் இதனால் தங்களது போக்கு வரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இவ் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.
றிதிதென்ன கொழும்பு வீதியில் ஒன்று கூடிய மக்கள் மணல் ஏற்றுவதை நிறுத்தக் கோரி கோஷங்களை எழுப்பியும் சுலோகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறும் இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஓமடியாமடு மீள் குடியேற்ற கிராமத்திற்கான வீதியானது றிதிதென்னயில் இருந்து சுமார் 7 கிலோமீற்றர் துரமாகும். நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் காணப்பட்ட இவ் வீதியினை அண்மையில் அரசின் விசேட 10 இலட்சம் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிறவல் இடப்பட்டு புனருத்தாரணம் செய்யப்பட்டது. 
குறுகிய காலத்திலே இவ் வீதி சேதமடைந்ததாக தெரிவிக்கின்றனர். 
கடந்த 3.1.2021 ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் மணல் அகழ்வு பணியில் ஈடுபடுவோர்களுக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
4.1.2021 ஆம் திகதி மண் எற்றிச் செல்லும் வாகனங்களை செல்போனில் போட்டோ எடுத்த மத போதகர் தாக்கப்பட்டு அவரது தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. போதகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் தாக்கியோர்கள் இது வரை கைது செய்யப்படவில்லை என பாதிக்கப்ட்டோர் கவலை தெரிவிக்கின்றனர்.