திருகோணமலை விஹாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்கு கைது!

(எப்.முபாரக்)
திருகோணமலை, கந்தளாய் பகுதியில் விஹாரைக்குச் சென்ற இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், பௌத்த பிக்கு ஒருவரை கைது செய்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், தம்பலகாமம் 96ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய விகாராதிபதி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

12 மற்றும் 14 வயதுச் சிறுவர்கள், பூஜை வழிபாட்டுக்காகச் சென்ற போது, பௌத்த பிக்கு தங்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள், தமது பெற்றோர்களுடன் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து, நேற்றிரவு (06) பிக்குவைக் கைது செய்துள்ள தம்பலகாமம் பொலிஸார், அவரை கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.