மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமனுக்கு விளக்கமறியல் ! - திருகோணமலையில் சம்பவம்


திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மாமியாரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகனை எதிர்வரும் ஜூலை மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் பயாஸ் றஸ்ஸாக் முன்னிலையில் இன்று (22) குறித்த சந்தேக நபரை ஆஜர்படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை, கிளிகுஞ்சுமலை பகுதியைச் சேர்ந்த ஹெட்டியாராய்ச்சிலாகே கருணாபால (56) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

குறித்த சந்தேக நபர் தனது மனைவியின் தாயாரான 70 வயதுடைய பெண்ணை மது போதையில் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த பெண்ணை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சந்தேக நபரை கைது செய்து திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

கிளிக்குஞ்சு மலை பகுதியில் கள்ளச்சாராயம் உற்பத்தி மற்றும் போதைப்பொருள் விற்பனை போன்ற செயற்பாடுகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்ற நிலையில் சிவில் உடைகளில் பொலிஸார கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.