மக்கள் பணிமனையை திறந்து வைத்தார் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்!


(கல்லடி நிருபர்)

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள மக்களுக்கான தனது இராஜாங்க அமைச்சின் சேவையினை மக்கள் காலடிக்கே கொண்டு சேர்ப்பதற்கான இராஜாங்க அமைச்சரின் மக்கள் பணிமனை திறப்பு விழா நிகழ்வு திங்கட்கிழமை இடம்பெற்றது.

பின்தங்கிய கிராம அபிவிருத்தி, மனைசார் கால் நடை மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் பட்டிப்பளை பிராந்தியத்திற்கான மக்கள் பணிமனை அலுவலகமானது கடுக்காமுனையில் இராஜாங்க அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

முற்போக்குதமிழர் அமைப்பின் பிரதான இணைப்பாளரும் மண்முனை தென் மேற்கு பிரதேச சபையின் பிரதேச சபை உறுப்பினருமான வை.சந்திரமேகன் உள்ளிட்ட முற்போக்குதமிழர் அமைப்பின் இணைப்பாளர்களின் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது இராஜாங்க அமைச்சருக்கு மண்முனை பாலத்திலிருந்து அமோக வரவேற்பளிக்கப்பட்டு, பாண்டு வாத்திய இசை முளங்க, வாகனப் பேரணியாக அழைத்து வரப்பட்டதனைத் தொடர்ந்து, இராஜாங்க அமைச்சரினால் நாடா வெட்டி மக்கள் பணிமனை மிகவும் கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது.

அத்தோடு பணிமனையின் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இராஜாங்க அமைச்சரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டு அவருக்கான நினைவுச்சின்னங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டதுடன், பொன்னாடைகளும் போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரின் பாரியார் திருமதி.ஜ.வியாழேந்திரன் அவர்களும் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச்செயலாளர்கள் முற்போக்கு தமிழர் கழகத்தின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட கிராம மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.