தனிமையில் இருந்த வயோதிபர்களை தாக்கி கொள்ளை!



முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வீட்டுடன் வணிக நிலையம் வைத்து தொழில் செய்து வந்த வயோதிப குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளைக்கும்பல் ஒன்று வயோதிப பெற்றோர்களை தாக்கி தந்தையினை காயப்படுத்திவிட்டு தாயின் கழுத்தினை நெரித்து கத்திமுனையில் அச்சுறுத்திவிட்டு வீட்டில் இருந்த 32 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் வணிக நிலையத்தில் இருந்த 7 இலட்சம் ரூபா பணம் என்பன கொள்ளையர்களினால் கொள்ளையடிக்க்பபட்டுள்ளன.

இந்த சம்பவம் அதிகாலை 2.00 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

மூன்று கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்து வயோதிப தந்தையினை தாக்கி காயப்படுத்திவிட்டு வயோதிப தாயினை கத்திமுனையில் அச்சுறுத்தி கழுத்தினை நெரித்துக்கொண்டு பணம், தங்கங்கள் எங்கு வைத்திருக்கின்றாய் என கேட்டு அவர்கள் இருப்பிடத்தினை சல்லடை போட்டு தேடியுள்ளார்கள்.

கடையின் பணம் வைக்கும் இடத்தினை சல்லடை போட்டு தேடிய கொள்ளையர்கள் அதில் வைக்கப்பட்டுள்ள 7 இலட்சம் ரூபா பணத்தினை கொள்ளையடித்துள்ளதுடன்,

கையில் , கழுத்தில், காதில் உள்ள தங்க நகைகளை அபகரித்து சென்றுள்ளதுடன் மறைத்து வைக்கப்பட்ட ஒருதொகை நகைகள் என 32 பவுண் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளார்கள். கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த 60 அகவையுடைய வயோதிபர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் தலைமையக அதிகாரிகள் மற்றும் தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.