சமூக வலைத்தளங்களில் பாலியல் ரீதியில் தவறாக விமர்சனம் செய்தவர்கள் தொடர்பில், ஹிருணிகா பதில்


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொழும்பில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஹிருணிகா பிரேமசந்திரவை சமூக வலைத்தளங்களில் பாலியல் ரீதியில் தவறாக விமர்சனம் செய்தவர்கள் தொடர்பில், ஹிருணிகா பிரேமசந்திர தனது பேஸ்புக் பக்கத்தில் பதில் வழங்கியுள்ளார்.

”எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்! அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு சௌகரியமளித்து, எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன். (பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக) வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும், கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன். எப்படியென்றாலும், எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்!”

இதேவேளை, மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமசந்திரவின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் விதத்தில், புகைப்படங்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏனைய அனைவரையும் விடவும், தாய் என்ற கருப்பொருளுக்கு உயரீய இடத்தை வழங்கி செயற்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு முன்பாக ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட மகளிர் சிலர் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்திய சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, தவறான கருத்துக்களை வெளியிடுகின்றமை தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்