தடை செய்யப்பட்ட தமிழ் அமைப்புகள் குறித்து பாதுகாப்பு அமைச்சு விளக்கம்!


பல தரப்பினருடன் நடத்திய நீண்ட ஆய்வுக்குப் பின்னர் தடைப்பட்டியலில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான தடை நீக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டமை குறித்து பாதுகாப்பு அமைச்சு இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், புலனாய்வு திணைக்களம் மற்றும் மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு ஆகியன ஆய்வை மேற்கொண்டுள்ளன.

2021 ஆம் ஆண்டு 577 பேரும், 18 அமைப்புகளும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது அதில் இருந்து, 316 பேரையும், 06 நிறுவனங்களையும் கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், பயங்கரவாதத்திற்கு பணம் மற்றும் ஆதரவை வழங்குவதில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட 55 நபர்கள் மற்றும் 03 நிறுவனங்களை கறுப்புப்பட்டியலில் இணைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.