மட்டக்களப்பில் இடம்பெற்ற மாவட்ட இலக்கிய விழா – 2022

 

கலாசார அலுவல்கள் திணைக்களமும்  மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் 2022 ஆம் ஆண்டிற்கான மாவட்ட இலக்கிய விழா மட்டக்களப்பு   மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் தலைமையில் (27) திகதி செவ்வாய்க்கிழமை மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்விற்கு அதிதிகளாக மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் கலாநிதி முருகு தயாநிதி மற்றும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம்.ஏ.சீ.ஜெய்னுலாப்தீன் உள்ளிட்ட மேலும் பல அதிகாரிகளும் கலந்து சிறப்பித்துள்ளனர்,

மூவினங்களின் பாரம்பரியம், தொன்மை மற்றும் பல் மத கலாசார வெளிப்பாடுகள், விழுமியங்களை வெளிப்படுத்தும் பண்பாட்டு கலை கலாசார, இலக்கிய நிகழ்வுகள் இதன்போது அரங்கேற்றப்பட்டிருந்தது.

இதன் போது இலக்கிய விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள்,  இளைஞர்கள், கலைஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் இதன்போது அதிதிகளினால் பராட்டி நினைவுச்சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இதன்போது கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் விழுமியங்களையும், தொன்மைகளையும், கலாசார பண்புகள் மற்றும் மட்டக்களப்பிற்கே உரித்தான கலைகள் அவற்றின்பாலெழுந்த படைப்புக்களையும் முழு உலகிற்கு அறியச் செய்வதற்கான அர்த்தமிகு நிகழ்வாக 2022 ஆம் வருடத்திற்கான மாவட்ட இலக்கிய விழா மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.