கிழக்கு மாகாண தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா - 2022


(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
2022ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.

அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளை மீண்டும் மீண்டும் பேசுபொருளாக்கி, அவர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்களை உருவாக்க வேண்டுமென்பது இந்த மாற்றுத்திறனாளிகள் விளையாட்டின் நோக்கமாகும். அதேவேளை இந்த விளையாட்டில் பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் தேசிய அளவில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு விழாவில் பங்குபற்றி வெற்றி ஈட்டுவதற்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது.

இதன்போது மட்டக்களப்பு சிவானந்தா மைதானத்தில் உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்துக்கும் யாழ் விழிப்புலனற்றோர் சங்கத்துக்கும் இடையில் நடைபெற்ற சத்தப்பந்து கிரிக்கட் போட்டியில் உதயம் விழிப்புலனற்றோர் அணி வெற்றி ஈட்டியது.

ஒவ்வொரு தடவையும் Tamil Para தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா நடைபெறுகின்ற போதும் விஷேட நிகழ்வாக சத்தப்பந்து கிரிக்கட் போட்டி நடைபெறுவதோடு, இந்தப் போட்டியில் பங்குபற்றும் வீரர்களில் சிலர் இலங்கையின் தேசிய சத்தப்பந்து கிரிக்கட் போட்டியில் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கது.

இந்த விளையாட்டில் சிறப்பு விருந்தினராக இலங்கை தேசிய சத்தப்பந்து கிரிக்கட் போட்டிக் குழுவின் செயலாளர் அழைக்கப்பட்டிருந்தார்.

அவர் நிகழ்வில் பேசும் போது,
இவ்வாறான போட்டிகளில் பல சத்தப்பந்து கிரிக்கட் வீரர்களை உருவாக்கக் கூடிய சந்தர்ப்பம் இருப்பதாகவும், அவர்கள் தேசிய அணியில் போட்டியின் அடைப்படையில் தெரிவு செய்வதற்கு தாங்கள் ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இரண்டாம் நாள் இறுதிப்போட்டிகள் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன.

நேற்றைய தினம் சக்கர நாற்காலி ஓட்டம், அஞ்சல் ஓட்டம் மற்றும் கரப்பந்தாட்டம் போன்ற போட்டிகளின் இறுதிப்போட்டிகள் நடைபெற்றன.

விளையாட்டுப்போட்டியின் இறுதி நிகழ்வாக வெற்றியீட்டிய வீரர்களுக்கு அதிதிகளினால் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

இறுதிநாள் நிகழ்வுகளிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், வெற்றியீட்டிய வீரர்களை பாராட்டியதுடன் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம் மற்றும் DATA அமைப்பு என்பன இணைந்து நடாத்திய தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா கோலாகலமான நிறைவு நாள் நிகழ்வுகளோடு நிறைவுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.