முட்டையின் விலை 75 ரூபா வரை உயரும் !



எதிர்வரும் காலங்களில் முட்டையொன்றின் விலை 75 ரூபா வரை உயர்வடையும் என தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் முட்டை மற்றும் கோழிப்பண்ணை தொழில் பாரிய வீழ்ச்சி நிலையை அடைந்துள்ளதாக தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யு சிறில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், கோழிகளின் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளதால், முட்டை மற்றும் கோழி இறைச்சித் தொழிற்துறையை மீள முன்னோக்கி கொண்டு செல்வதற்கு மேலும் காலம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தக அமைச்சு முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அமுலாக்குவதற்கு முன்னர், கால்நடைவள அபிவிருத்தி சபையில் எவ்வித ஆலோசனைகளையும் பெறவில்லை. முட்டையொன்றுக்காக 49 ரூபா செலவாகின்றது.

இவ்வாறிருக்கையில், வெள்ளை முட்டையொன்று 43 ரூபாவுக்கும், சிவப்பு முட்டையொன்று 45 ரூபாவுக்கும் விற்பனை செய்ய வேண்டும் என அரசாங்கத்தினால் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் பலர் இந்த தொழிற்துறையை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வருடம் ஒன்றுக்கு, 80 ஆயிரம் முட்டையிடும் கோழிகள் உருவாக்கப்படும் நிலையில், முட்டை தீவணம் இன்மையினால் குறித்த எண்ணிக்கை தற்போது 10 ஆயிரம் வரை வீழ்ச்சியடைந்துள்ளன.

இதன்காரணமாக எதிர்வரும் காலப்பகுதியில் முட்டையொன்றின் விலை 75 ரூபா வரை செல்லும் என தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யு சிறில் குறிப்பிட்டுள்ளார்.