SLSI அனுமதியின்றி இயங்கிய டின் மீன் உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு – ரூ.15 இலட்சம் பெறுமதியான பொருட்கள் பறிமுதல்


பன்னல, எலபடகம பகுதியில் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் அனுமதியின்றி இயங்கி வந்ததாகக் கூறப்படும் டின் மீன் உற்பத்தி நிலையமொன்றை நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) சுற்றிவளைத்துள்ளது.

இந்தச் சோதனையின்போது சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான டின் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பல்பொருள் அங்காடிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. மேலும், சில டின் மீன் தயாரிப்புகளில் உற்பத்தித் திகதி குறிப்பிடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சட்டவிரோத உற்பத்திகள், தரமற்ற உணவுப் பொருட்கள் அல்லது நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை அலுவலக நேரங்களில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அறிவிக்குமாறு CAA பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.