.jpg)
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.
இம்முறை பரீட்சைக்காக பாடசாலை விண்ணப்பதாரர்கள் 264,496 பேரும், தனியார் விண்ணப்பதாரர்கள் 107,814 பேரும் அடங்கலாக மொத்தம் 372,310 விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளனர்.
பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அந்தந்த அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
பரீட்சை மண்டபத்திற்குள் நுழைவதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்களது கையொப்பத்தை முறைப்படி சான்றொப்பம் செய்து கொள்வது கட்டாயமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அனுமதி அட்டை தொலைந்து போயிருந்தால், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து அதை மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
பரீட்சையின் போது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த முடியும்.
தேசிய அடையாள அட்டை தொலைந்துபோயிருந்தால், தற்காலிக அடையாள அட்டையாக தபால் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் இரண்டு புகைப்படங்களை பாடசாலை விண்ணப்பதாரர்கள் அதிபர் மூலமும், தனியார் விண்ணப்பதாரர்கள் கிராம உத்தியோகத்தர் மூலமும் சான்றொப்பம் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பரீட்சை கால அட்டவணையை தீவிரமாகக் கவனத்திற் கொண்டு, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருமாறு பரீட்சைத் திணைக்களம் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் கையடக்கத் தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது புளூடூத் உள்ளிட்ட எந்தவொரு இலத்திரனியல் சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வர முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை விதிகளுக்கு அமைவாகச் செயல்பட்டு பரீட்சை மோசடிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், கடந்த ஆண்டுகளிலும் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் முடிவுகள் இடைநிறுத்தப்பட வேண்டியிருந்ததாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
ஏதேனும் அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்ப்பட்டால், அதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும் பரீட்சைத் திணைக்களம் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





.jpg)




.jpg)


