உணவகங்கள் மீது மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது நான்கு நபர்களுக்கு எதிராக வழக்கு !


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலக உணவு பாதுகாப்பு பரிசோதகர்கள் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து வாழைச்சேனை பிரதேசத்தில் உணவகங்கள் மீது மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது நான்கு நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டி.எஸ்.சஞ்ஜீவ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டி.எஸ்.சஞ்ஜீவ் தலைமையில் வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள உணவகங்கள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள பதினொரு உணவகங்கள் பரிசோதனை செய்யப்பட்டதில் நான்கு உணவகங்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் ஒவ்வொரு வழக்குக்கும் ஆறாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டி.எஸ்.சஞ்ஜீவ் தெரிவித்தார்.

குறித்த திடீர் பரிசோதனையின் போது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலக உணவு பாதுகாப்பு பரிசோதகர்கள், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பரிசோதகர் இ.நிதிராஜ், பொது சுகாதார பரிசோதகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.