தோஷ பரிகாரம் செய்வதாகக் கூறி 3 இலட்சம் ரூபா மோசடி


வீட்டில் உள்ள தோஷத்தை நிவர்த்தி செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை – சியம்பலாவெவ பிரசேத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

தோஷத்தை நிவர்த்திப்பதற்கான பரிகாரமாக தங்கத்தால் செய்யப்பட்ட பறவையின் உருவத்தை வீடொன்றில் வைத்த சந்தேகநபர்கள் 3 இலட்சம் ரூபாவை வீட்டு உரிமையாளரிடமிருந்து பெற்றுள்ளனர்.

சந்தேகநபர்களால் வைக்கப்பட்ட பறவையை வீட்டு உரிமையாளர் தங்க விற்பனை நிலையமொன்றில் பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அது தங்கத்தினால் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கான பரிகாரத்திற்காக 6 இலட்சம் ரூபாவை அவர்கள் வீட்டு உரிமையாளரிடம் கோரியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.