ஆற்றில் குதித்த இளம் ஜோடி : யுவதியின் சடலம் மீட்பு !



மினுவாங்கொடை, ஓபாத, சமுர்த்தி பிரதேசத்தில் உள்ள ஆறு ஒன்றில் இளைஞரும் யுவதியும் குதித்துள்ள நிலையில்,யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.

மினுவாங்கொடை யட்டியனை பகுதியைச் சேர்ந்த 25 வயதான யுவதியின் சடலமே மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் கிராம அதிகாரிக்குத் தகவல் வழங்கியதனையடுத்தே யுவதியின் சடலமும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே ஆற்றில் குதித்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வத்துபிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் காணாமல் போயுள்ள இளைஞரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.