கேரளா கஞ்சாவினை வைத்திருந்தவர் சாய்ந்தமருது பகுதியில் அதிரடிப்படையினரால் கைது!

(பாறுக் ஷிஹான்)

மோட்டார் சைக்கிளில் 1 கிலோ  கேரளா கஞ்சாவினை  கடத்திய சந்தேக நபரை கல்முனை  விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

வியாழக்கிழமை (30) இரவு விசேட அதிரடிப்படையினரின்  புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய  அம்பாறை மாவட்டத்தில் உள்ள   கல்முனை விசேட அதிரடிப்படையினர்   மேற்கொண்ட நடவடிக்கையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்முனை பகுதியை சேர்ந்த  45 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் மேற்குறித்த கேரளா  கஞ்சா  போதைப்பொருளை கடத்தி செல்வதற்காக தயாராக இருந்த வேளை அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது இலங்கை வங்கிக்கு முன்பாக  வைத்து  சந்தேக நபர் மோட்டார் சைக்கிளுடன்  கைதானார்.

 இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் இருந்து  தொலைபேசி ஒன்று ,  1 கிலோ  பொதி செய்யப்பட்ட கேரளா கஞ்சா,   ஒரு தொகை பணம்   ,மோட்டார் சைக்கிள் , என்பன விசேட அதிரடிப்படையினரால்   கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை பதில் அதிகாரி  பொலிஸ் அத்தியட்சகர்  ஏ.டி.டி நெத்தசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய   அம்பாறை மாவட்ட பதில் கட்டளை அதிகாரியும் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகருமான  நளீன் பெரேரா ஆகியோரின் வழிகாட்டலில்    கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்க மேற்பார்வையில்   பொலிஸ் பரிசோதகர்   எஸ்.எம்.பி.பி.எம்   டயஸ்  தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர்   எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க   உள்ளிட்ட  பொலிஸ் சார்ஜன்டுகளான  பண்டார(13443) ,பெரேரா (71664)    பொலிஸ் கன்ஸ்டபிள்களான நிமேஸ் (90699) ,அபேரட்ன(75812) ,  வாகனச்சாரதி டபிள்யு.எம் குணபால (19401) அதிகாரிகள் மற்றும்  புலனாய்வு பிரிவினர் இணைந்தே இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.

  பின்னர்  கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் சாய்ந்தமருது  பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த குறித்த சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் மாறுவேடத்தில் சென்று நீண்ட போராட்டத்தின் பின்னர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.