கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியல் பீடம் ஆரம்பிக்க இந்திய அரசின் உதவியுடனான கேட்போர் கூடம் அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிப்பு!

(சரவணன்)

கிழக்கு பல்கலைகழகத்தில் பொறியல் பீடம் ஆரம்பிக்க மற்றும்  இந்திய அரசின் உதவியுடனான கேட்போர் கூடம் அமைப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதுடன்  உரமானியம், நெல்விலை நிர்ணயம் மற்றும் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.

மட்டக்களப்பிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (10) விஜயம் மேற்கொண்டுடபோது மட்டக்களப்பு விமான நிலையத்தில் தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க. மோகன் நட்பு ரீதியாக சந்தித்தார்.

இதன்போது கிழக்கு பல்கலைகழகத்தின் துணைவேந்தர்  கனகசிங்கம் பதிவாளர் பகிரதன்  ஆகியோரை ஜனாதிபதியடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டபோது கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியல் பீடம் ஆரம்பிப்பதற்கும் இந்திய அரசின் உதவியுடனான கேட்போர் கூடம் அமைப்பதற்கும்  வேண்டுகோள் விடுத்ததையடுத்து அவர் இணக்கம் தெரிவித்தார்.

அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் அறுவடைகாலத்தையும் விதைப்பு காலத்தையும் கருத்தில் கொண்டு உரமானியம், நெல்விலை நிர்ணயம் மற்றும் நெல் கொள்வனவு செய்வதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக  க. மோன் தெரிவித்தார்.