குழந்தையொன்று கடலில் மூழ்கி பலி

(பாறுக் ஷிஹான்)

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள  நிந்தவூர் பகுதியில்  கடலில் மூழ்கி குழந்தை ஒன்று  உயிரிழந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை(6) இவ்வாறு உயிரிழந்த குழந்தையானது  நிந்தவூர்  9ஆம்  பிரிவைச் சேர்ந்த முஹம்மது இல்லியாஸ் பாத்திமா நிஸா தம்பதிகளின் ஒன்றரை வயது நிரம்பிய முகம்மட் ஆதில் எனும் ஆண் குழந்தை என பொலிஸார் குறிப்பிட்டனர்.இன்று காலை குறித்த குழந்தையின் அம்மாவின் தந்தை  கடற்கரைக்கு  குழந்தையை கூட்டிச் சென்று கடற்கரை ஒரத்தில் விளையாட விட்டுள்ளார்.

இவ்வாறு விளையாடிய  குழந்தையை அவர்  கவனிக்காத போது குழந்தையை  கடல் அலை  அடித்து சென்றுள்ளது.பின்னர்  குழந்தையை அங்கும் இங்கும் தேடிப்பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிச் சென்று வீட்டாரிடம் குழந்தையை காணவில்லையென கூறிவிட்டு மீண்டும் கடற்கரைக்கு தேடிச் சென்றுள்ளார்.

அதன் போது   குழந்தை கடலில் மூழ்கிய நிலையில்  சுமார் 800 மீட்டருக்கு அப்பால்   உடல் கரை ஒதுங்கியதாக   மீனவர்கள் கண்டெடுத்துள்ளனர்.மேலும்   குறித்த குழந்தையின் தந்தை வெளிநாட்டுக்குச் சென்று 15 நாட்களேயான நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

அத்துடன்  இறந்த  குழந்தையின் உடல்  நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பொலிசாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.