S4IG இன் உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் திட்டமானது ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், திறன் விருத்தி மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சின் (MSDVT) வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத் திட்டமானது, மாகாண மற்றும் மாவட்ட அளவிலான அரசாங்க அமைப்புக்கள், சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய அமைப்புக்கள் உள்ளடங்கிய மற்றும் சமூக அமைப்புகளுடன் நெருக்கமாகப் இணைந்து செயற்படுத்தப்படுகிறது. அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை (கிழக்கு மாகாணம்) மற்றும் பொலன்னறுவை (வடமத்திய மாகாணம்) ஆகிய இலங்கையின் நான்கு மாவட்டங்களில் சுற்றுலாத்துறை மதிப்புச் சங்கிலியில் (value chain) நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வியாபார விருத்திக்கான ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு சிறந்தவொரு எடுத்துக்காட்டாக இத்திட்டம் அமைகிறது.
இதன் அடிப்படையில் S4IG ஆனது சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளிலான திறன் இடைவெளிகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு "பணித்தளத்திலான அடிப்படைத் திறன் அபிவிருத்தித் திட்டத்தினை" (Workplace -based basic skill development) முன்னெடுத்தது. இத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இவ் பாடநெறியினை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவானத்து 2019 செப்டம்பர் 12ம் திகதி நேற்றையதினம் அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது 109 பணித்தள பயிலுனர்கள்(Workplace Trainees), 08 வழிப்படுத்துனர் (Mentors), மற்றும் 41 பணித்தளப் பயிற்சியாளர்கள் ( Workplace Trainers) சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் இந்த விழாவில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எல்.எல். பண்டார நாயக்க மற்றும் S4IG குழுத் தலைவர் திரு. டேவிட் ஆப்லெட், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன், S4IGன் அம்பாறை மாவட்ட முகாமையாளர் உ.லே.சம்சுதீன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேலும் S4IG இன் திட்டத்தின் மூலம் சுற்றுலாத் துறையானது இலங்கையில் துரிதமாக வளர்ச்சிகண்டு வருகின்றது. அந்தவகையில், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுலாத் துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தற்போது 16,526 நபர்கள் ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறையிலும், உணவு மற்றும் குடிபானங்கள் துறையிலும் பணியாற்றி வருகின்றனர். எதிர்பார்க்கப்படும் வேலைவாய்ப்பு வீதமானது 3.7% இனால் அதிகரிக்கும் பட்சத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் 22,640 நபர்கள் இத்துறைகளில் பணியாற்றக்கூடும். அதேவேளை 5000 புதிய தொழில்கள் இந்த 4 மாவட்டங்களில் உருவாக்கப்படும்.
S4IG திட்டமானது சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளிலான திறன் இடைவெளிகளை அடையாளங்கண்டுள்ளது. இந்த பகுப்பாய்வின் போது, சந்தை நிலைமைகளுக்கேற்ற பொருத்தமான திறன் அபிவிருத்திப் பயிற்சிகள் கிடைக்கப்பெறாமை அல்லது அவை மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதற்கான முக்கிய காரணங்களாக கற்றல் உபகரணங்களின் பற்றாக்குறை, பயிற்சியாளர்களின் பற்றாக்குறை, பயிற்சி வழங்குனர்களுக்கும் தொழில்தருனர்களுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு, சமூக ரீதியான ஆர்வமின்மை, போதிய பயிற்சியின்மை, தொழிற்பாதை மற்றும் தொழிற்சந்தை தொடர்பான போதிய விழிப்புணர்வின்மை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவையனைத்தும் மேற்குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளிலான திறன் விருத்திக்குத் தடையாக உள்ளன.
சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளிலான திறன் இடைவெளிகளை நிவர்த்திசெய்யும் பொருட்டு S4IG ஆனது "பணித்தளத்திலான அடிப்படைத் திறன் அபிவிருத்தித் திட்டத்தினை" (Workplace -based basic skill development) முன்னெடுத்துவருகிறது. இதன் வாயிலாக மேற்குறிப்பிட்ட 4 மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட ஹோட்டல், உணவு மற்றும் குடிபானங்கள் வியாபார தாபனங்களிலான அடிப்படைத் திறன் இடைவெளிகள் அல்லது தேவைகளை நிவர்த்திசெய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. FCCISL , வர்த்தக சம்மேளனங்கள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளிலுள்ள ஏனைய முக்கியமான பங்காளர் நிறுவனங்களின் உதவியுடன், சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காகவும் வருமதானத்தை அதிகரிப்பதற்காகவும், பொருட்கள் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான பயிற்சிகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவம் 4 மாவட்டங்களிலும் அடையாளங்காணப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களிலும் உள்ள 300 க்கும் மேற்பட்ட விடுதிகள், ஹோட்டல்கள், பங்களாக்கள் மற்றும் உணவகங்களின் பணித்தளங்களை அடிப்படையாகக் கொண்ட 300 பயிற்றுனர்கள், 1,200 க்கும் அதிகமான பயிலுனர்கள் அல்லது ஊழியர்களின் அடிப்படைத் திறன்களை விருத்திசெய்ய உதவுவதன் மூலம் தொழிற்சந்தைக்கு அவர்களைத் தயார்படுத்துகின்றனர். இதில் உபயோகிக்கப்படும் பயிற்சி மற்றும் மனிதவளங்களை புதிதாக இணைந்து கொள்ளும் ஊழியர்களைப் பயிற்றுவிப்பதற்கும் மேலும் பணித்தளத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்களின் உற்பத்தித்திறனை மேம்மடுத்தவதற்கும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.