முகவரை நம்பி கனடாவுக்கு செல்ல முயன்ற மட்டக்களப்பை சேர்ந்தவர் விமான நிலையத்தில் கைது !

போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்கு  செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர், குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால், வியாழக்கிழமை (16) காலை  கைது செய்யப்பட்டார்.

இவர் மட்டக்களப்பை வசிப்பிடமாக கொண்ட 37 வயதுடைய தமிழர் ஆவார்.

வியாழக்கிழமை (16)  காலை 08.15 மணிக்கு டுபாய்க்கு புறப்படவிருந்த  எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் ரிகே-653 விமானத்தில் பயணிப்பதற்கு  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் கனேடிய விசா குறித்து சந்தேகம் கொண்ட விமான அதிகாரிகள், அவரை குடிவரவு மற்றும் எல்லை அமலாக்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.              தொழில்நுட்ப சோதனையில் இந்த விசா போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 அதனையடுத்து, இவரை கைது செய்த குடிவரவு எல்லை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த விசாவை தயார் செய்ய தரகரிடம் 30 இலட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், மேலும் 30 இலட்சத்தை கனடா சென்ற பிறகு தருவதாக ஒப்புக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.  

  கைது செய்யப்பட்ட இந்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்