கட்டுநாயக்க விமான நிலையத்தில் நீங்களாகவே போர்டிங் பாஸ் மற்றும் ஏனைய சேவைகளை செய்துகொள்ளும் வசதி அறிமுகம் ! Self Check-in


கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி கடவுச்சீட்டு பரிசோதனை இயந்திரங்களை நிறுவும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (14) காலை 10.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் நடைபெற்றது.

கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் பயணிகளிடத்தில் ஏற்படும் நெரிசல்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் , ஏர்போர்ட்ஸ் மற்றும் ஏர்லைன்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இந்த இயந்திர திட்டத்திற்கான நிதி முதலீட்டை வழங்கியுள்ளன.

இந்த இயந்திரங்கள் மூலம் பயணிகள் தங்கள் இருக்கைகளை தேர்ந்தெடுக்கவும் போர்டிங் பாஸ் முத்திரையிடுவதற்கும்  பயண பையை முத்திரையிடுவதற்கும் பயணிகளுக்கு வசதிகள் வழங்கப்படும்.

விமானப் பயணிகள் பொதிகளை இறக்கும் இயந்திரத்திற்குச் சென்று பொதிகளை ஒப்படைத்து குடியகல்வு அனுமதிக்கு நுழைய முடியும்.

இந்த தானியங்கி இயந்திரங்களினால் விமானப் பயணிகள் 05 நிமிடங்களுக்குள் தங்களது விமான நிலைய கடமைகளை நிறைவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

இவ் இயந்திர வசதிகள் தற்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகளுக்கு மாத்திரமே கிடைக்கப்பெறவுள்ளதோடு ஏனைய விமான பயணிகளுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டல், விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் லிமிடெட்டின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, விமான நிலைய முகாமைத்துவத் தலைவர் எச்.எஸ். ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.