திருகோணமலைக்கு சற்றுத் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் : சூறாவளியாக வலுவடையும் !



தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புக்கு மேலாக விருத்தியடைந்த காற்றழுத்த தாழ்வு நிலை டிசம்பர் 01 ஆம் திகதி 23.30 மணி அளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 490 கிமீ தொலைவில் 10.3° வடக்கு அட்சரேகை மற்றும் 85.3° கிழக்கு தீர்க்கரேகையில் நிலைகொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாளை (03) புயலாக வலுப்பெறவுள்ளது.

இந்த அமைப்பு இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 05 ஆம் திகதிக்குள் இந்தியாவின் வட தமிழக கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

தென் மற்றும் மேற்கு மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.