இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் ஒருவர் கைது !


இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் மாம்புரி பகுதியிலிருந்து மதுரங்குளி பகுதிக்கு பீடி இலைகளைக் கொண்டு செல்ல முற்பட்ட ஒருவரே புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பீடி இலைகளைக் கொண்டு செல்ல உள்ளதாக புத்தளம் பிராந்திய மூத்த கண்காணிப்பு பொலிஸ் அதிகாரிக்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரினால் மாம்புறி திடல் பகுதியில் லொறியினை மறைத்து சோதனைக்கு உற்படுத்தியுள்ளனர். இதன்போது சுமார் 49 உரைகளில் 1,435 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மதுரங்குளிப் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியென தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறி ஆகியவற்றை நுரைச்சோலைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவருவதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் லொறி ஆகியவற்றை கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க உள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.