நாட்டின் மூன்றில் ஒரு பகுதியினர் கடன் தேவையினால் அவதியுறுகின்றனர் !



நாட்டின் சனத்தொகையில் 34.4 வீதமானோர் கடன் தேவையினால் அவதியுறுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி திருமதி அசுசா குபோடா தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியில் நேற்று (மே 21) இலங்கையின் நிதி எழுத்தறிவு பாதை வரைபடத்தை வெளியிடும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நாட்டில் பெண்கள் மற்றும் இளைஞர் சமூகம் பொருளாதார ரீதியாக சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகவும், இந்த நாட்டில் பெண்களுக்கு நிதி அறிவு மற்றும் நிதி தொடர்பான தகவல்களை வழங்க வேண்டிய தேவை இருப்பதாகவும் வதிவிட பிரதிநிதி குறிப்பிட்டார்.

கடன் மேலாண்மை, சமூகப் பாதுகாப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நிதி கல்வியறிவு பற்றிய அறிவு மிகவும் முக்கியமானது என்றும் நிதியியல் கல்வியறிவு மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.