அனுராதபுரத்தில் வெள்ளை வானில் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் - உடனடியாக விசாரணைகளை கோரியது இலங்கைமனித உரிமை ஆணைக்குழு !



அனுராதபுரத்தை சேர்ந்த கபில குமார டிசில்வா என்பவர் பலவந்தமாக கடத்தப்பட்டது தொடர்பில் சட்டமாஅதிபர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என இலங்கையின்மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அனுராதபுரம் ஹொரவப்பொத்தானையை சேர்ந்த கபிலகுமார டிசில்வா கடத்தப்பட்டு இரகசியமறைவிடத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையை மீகநீண்டகாலமாக பாதித்துவரும் பலவந்த காணாமல்போகச்செய்தல் மீண்டும் தலைதூக்குகின்றது என்ற அச்சத்தின்மத்தியில்இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

கபிலடிசில்வா என்பவர் காணாமல்போனதன் பின்னணியில்உள்ள அச்சத்தை ஏற்படுத்தும் விடயங்கள் குறித்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நீதிபதி எல்டிபி தெகிதெனிய கடிதமொன்றை சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளார்.

மார்ச் 27 ம் திகதி முதல் கபில டிசில்வா என்பவர் காணாமல்போயுள்ளார் என அவரது தாயார் தெரிவித்துள்ளார் என அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினர் கபில டி சில்வாவை கைதுசெய்தனர் என அவரது தாயார் முறைப்பாடு செய்துள்ளார் எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச் 29 ம் திகதி விசேட அதிரடிப்படையினர் கபில டி சில்வாவின் வீட்டிற்கு சென்றனர் அவர் எங்கு என விசாரித்தனர் என தாயார் முறைப்பாடு செய்துள்ளார் எனவும் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அவர் துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக காணப்படுகின்றார் எனினும் அவரை தாங்கள் கைதுசெய்யவில்லை என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர் எனினும் சில்வா பிட்டிகல பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் காலி சிறைச்சாலையில்உள்ளதாகவும்தகவல் கிடைத்தது எனவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காலி சிறைச்சாலைக்கான விஜயத்தின் போது இலங்கைமனித உரிமை ஆணைக்குழுவினர் சில்வாவின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர் மார்ச்26ம் திகதி சீருடை அணியாத தங்களை பொலிஸார் என தெரிவித்த நபர்கள் தன்னை கைதுசெய்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும் இலங்கைமனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கண்ணைக்கட்டி வெள்ளை வானில் இரகசிய இடத்திற்கு கொண்டுசென்றனர் தாக்கினர் விசாரணை செய்தனர் என சில்வா தெரிவித்துள்ளார் இறுதியில் தான் சந்தேகநபர் இல்லை என உறுதி செய்து பிட்டிகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் எனவும் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.