திருகோணமலையில் இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி பலி : சகோதரன் படுகாயம் !


திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவன் பகுதியில் இன்று வியாழக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுமியின் சகோதரன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவத்தில் நிதர்சன் ஆதித்யா (வயது 6) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளதாகவும், சிறுமியின் சகோதரனான நிதர்சன் அதிரேஸ் (வயது 4) படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் இரண்டு பிள்ளைகளுடன் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கையில் குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.