
வாழைச்சேனை கிண்ணையடி பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் அகழப்பட்ட மண்ணை தென்பகுதிக்கு விற்பனை செய்யும் மண் விற்பனை நடவடிக்கையை தடுக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் வியாழக்கிழமை (08) பிரதேச மக்களால் மேற்கொள்ளப்பட்டது.
தென் பகுதியை சேர்ந்த கனரக வாகனங்களில் மண் ஏற்றப்படுவதனை கண்ட பிரதேச வாசிகள் சம்பவ இடத்திற்கு சென்று அதனை தடுக்க முற்பட்ட வேளை பொலிஸார் குறித்த இடத்திற்கு வருகை தந்து சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பிரதேச மக்கள் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியின் கும்புறுமூலை பகுதியில் மணல் லொறிகளை வெளியே செல்லவிடாமல் வழி மறித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அழிக்காதே அழிக்காதே மண் வளத்தை அழிக்காதே,மண்ணுக்காக உயிரையும் துறப்போம்,எமது கிராமத்தின் மண் வளத்தை அழிக்காதே.நிறுத்து, நிறுத்து,மண் ஏற்றுவதை நிறுத்து.மண் மாபிய கும்பலை ஒழித்து விடு.மீன் வளர்ப்பு என்ற போர்வையில் மண் மாபியாக்கள் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த மணல் அகழ்வு தொடர்பாக அரசாங்க அதிபரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியதை அடுத்து அவரது தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் பிரதேச செயலாளர்,நில அளவை சுரங்க பணியகம்,மாவட்ட நன்னீர் மீன்வளர்ப்பு அலுலகம் மத்திய சுற்றாடல் அதிகார சபை போன்ற திணைக்களங்கள் பங்குபற்றியிருந்தன.
இவ் கலந்துரையாடலின் போது எதிர்வரும் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அதுவரை மணல் அகழ்வு மற்றும் ஏற்றுமதி நடவடிக்கையை இடை நிறுத்தி வைக்கும்படி பணித்துள்ளார்.
அரசாங்க அதிபரின் பணிப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர்,பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் மற்றுத் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர்கள் நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பொருட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இதன்போது இருவரை பொலிசார் கைது செய்தமையை கண்டித்து பொலிசாருடன் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது மணல் ஏற்றுவதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதால் அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தினால் அதற்கான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தனக்கு அதிகாரம் உள்ளதாகவும் இது தொடர்பாக எவரும் பொலிஸ் முறைப்பாடு செய்யவும் இல்லையெனவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெளிவுபடுத்தினார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பொலிஸாருடன் கலந்துரையாடி கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு பொலிஸாரை கேட்டுக்கொண்டார்.
இதில் ஒருவர் தற்போது நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டவராவார். அவர்கள் இருவரும்.விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.பின்னர் ஏற்றிய மணலை குறித்த அதே இடத்தில் பறிக்கும்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அதன்படி ஏற்றிய மணல் மீண்டும் பறிக்கப்பட்டது. இதேபான்ற சம்பவம் இனிமேலும் இவ்விடத்தில் இடம்பெறாதாவாறு தாம் மேலதிக நடவடிக்கை எடுப்பதாக பிரதேச சபை செயலாளர் போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.குறித்த மணல் அகழ்வு நடவடிக்கையானது நன்னீர் மின் வளாப்பு என்ற போர்வையில் இடம்பெற்று வருகிறது.
கடந்த 4 வருடங்களாக மணல் அகழப்பட்ட பள்ளத்தில் மீன் வளர்க்கப்படவில்லை ஆனால் அகழப்பட்ட மணல் ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையே இடம்பெற்று வருகிறது.
இதனை தடுக்க முயற்சிப்போருக்கு எதிராக பொலிஸாரிடம் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.