தேசிய பாதுகாப்பு தொடர்பில் எமக்கு வகுப்பெடுப்பதாகக் கூறிய பாதுகாப்பு பிரதி அமைச்சரின் தேர்தல் தொகுதியிலும் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்தால் இந்தக் கொலைக் கலாச்சாரத்தை தடுக்க முடியாதுபோயுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்து, மக்களின் உயிரைப் பாதுகாப்பது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை (12) அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாளுக்கு நாள் நாடு பூராகவும் கொலைக் கலாச்சாரம் பரவி வருகிறது. இன்றும் கூட, நாட்டின் பாதுகாப்பு பிரதி அமைச்சரினது தேர்தல் தொகுதியான ஹோமாகம மீகொட பகுதியில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்றளவில் கூட அரசாங்கத்தால் இந்தக் கொலைக் கலாச்சாரத்தை தடுக்க முடியாதுபோயுள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்த வகுப்பிற்கு ஒரு நாற்காலியை எடுத்து வருமாறு தெரிவித்த பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் கூட இந்தக் கொலை இடம்பெறுகின்றன.
பாதாள உலக கும்பல்கள், திட்டமிட்ட அடிப்படையில் குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள், கொலைகாரர்கள் தோட்டாக்கள், குண்டுகள், துப்பாக்கிகள், வாள்கள் போன்றவைக் காட்டியும் பயன்படுத்தியும் சமூகத்தின் கட்டுப்பாட்டை தமது பிடியில் எடுத்துள்ளனர்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திடம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு உள்ளதா என்று தான் கேள்வி எழுப்புகிறோம்.
இவ்வாறான கொலைச் சம்பவங்கள் தேசியப் பாதுகாப்புக்கு பிரச்சினையாக அமைந்து காணப்படவில்லை என்று அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது.
நாட்டில் மக்கள் இறந்து கொண்டிருந்தால், அது தேசிய பாதுகாப்பு சார் பிரச்சினைகளில் ஒன்றாகும். தேசிய பாதுகாப்பை உறுதி செய்து, மக்களின் உயிரைப் பாதுகாப்பது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பொறுப்பாகும். இவ்வாறு செய்வது நாட்டுக்கான கடமையாகும் என்றார்.