மட்டக்களப்பில் தனது 16 வயது மகளின் கையினை இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்தி சித்திரவதை செய்த 45 வயது தாயாருக்கு சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் தீர்ப்பளித்தார்.
அதன்படி, குற்றவாளியென நிரூபனமாக்கப்பட்ட அந்தத் தாயின் ஒரு குற்றத்துக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை 10 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் அவ்வாறே 3 குற்றங்களுக்கும் 6 வருட கடூழிய சிறைத்தண்டனை 30 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடாக வழங்குமாறும் நீதவான் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் கடந்த 2009 நவம்பர் 21ஆம் திகதி 16 வயதுடைய தனது மகளின் கையில் இரும்புக்கம்பியால் தாக்கி காயப்படுத்தி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளார்.
இவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு, வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு 2017 ஜூலை 12ஆம் திகதி வழக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வந்துள்ளது.
தண்டணை சட்டக்கோவை 308 ஆ இரண்டாம் பிரிவின் கீழ் 16 வயது சிறுமியை இரும்புக் கம்பியால் தாக்கி சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் சாட்சியங்கள், சான்றுப் பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் தாயார் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.
இதனை தொடர்ந்து இவ்வழக்கு விசாரணைக்காக கடந்த 25ஆம் திகதி மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குற்றவாளிக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.