
காலி, அம்பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு தண்ணீர் போத்தலில் மதுபானத்தை ஊற்றி கொண்டு சென்ற நான்கு மாணவர்கள் மீட்டியாகொடை பொலிஸாரால் புதன்கிழமை (01) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மீட்டியாகொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நான்கு மாணவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் அதே பாடசாலையில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.
சிறுவர் தினத்தை கொண்டாடுவதற்காக நான்கு மாணவர்களும் தண்ணீர் போத்தலில் மதுபானத்தை ஊற்றி பாடசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நான்கு மாணவர்களும் ஹிக்கடுவை பிரதேசத்தில் உள்ள மதுபானசாலையிலிருந்து மதுபான போத்தலை கொள்வனவு செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீட்டியாகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.