வாழைச்சேனை பாடசாலைக்கு முன்னால் இயங்கி வந்த கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை - சந்தேக நபர் கைது !


மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்கு முன்பாக நீண்டகாலமாக கசிப்பு விற்பனை இடம் பெற்று வந்த வீடொன்றில் 100 லீற்றர் கசிப்புடன் சந்தேக நபர் ஒருவரை வியாழக்கிழமை (30) கைது செய்துள்ளதாக கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

'முழு நாடுமே ஒன்றாய்' போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் தேசிய செயற்பாட்டு திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண குற்ற தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் கசிப்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேக நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதுடன் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.