போயா தினத்தில் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு சூட்சுமமான முறையில் கசிப்பு கடத்திய முச்சக்கரவண்டி சாரதி கைது !

போயா தினத்தில் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு முச்சக்கரவண்டியில் சூட்சுமமாக மறைத்துவைத்து, கசிப்பு கடத்திய நபர் ஒருவரை ஏறாவூர் சவுக்கடி பகுதியில் வைத்து புதன்கிழமை (5) மாலை கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் சந்தேக நபரிடமிருந்து 20 லீற்றர் கசிப்பை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபரின் வழிகாட்டலில் நேற்று ஏறாவூர் சவுக்கடி வீதியில் பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு கசிப்பு கடத்திச் சென்ற முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்ட போது முச்சக்கரவண்டிக்குள் பொருத்தப்பட்ட ஒலிவாங்கிப் பெட்டியின் (பொக்ஸ்) உள்ளே சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 போத்தல் கசிப்பை கைப்பற்றியதுடன் முச்சக்கரவண்டி சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.