இது தொடர்பாக தெரியவருவதாவது,
குறித்த பகுதியான தாழங்குடா கடற்கரை பகுதியில் கடந்த 2019 ஏப்ரல் 17ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் சஹரான் குழுவினரால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டு வைத்து பரீட்சிக்கப்பட்டது.
இவ்வாறு பரீட்சித்த காணிக்கு அருகே உள்ள தனியார் காணியை சுற்றி தகரத்தால் வேலி அமைக்கப்பட்டு அதனை அதன் உரிமையாளர் பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி காணிக்கு அதன் உரிமையாளர் சென்றபோது அங்கு நிலத்தில் பாரியளவில் குழி தோண்டப்பட்டிருப்பதை கண்டுள்ளார்.
சஹரான் குழு போன்றவர்கள் போல ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட, நேற்று புதன்கிழமை (5) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த பகுதிக்கு பொலிஸார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
சில தீய சக்திகள் அந்தப் பகுதியில் ஏதாவது வெடிபொருள் அல்லது வேறு ஏதாவது பொருளை புதைத்து வைத்துவிட்டு, அதை தோண்டி எடுப்பதற்காக குழி தோண்டியிருக்கலாம் என்பது போன்ற பல சந்தேகங்களின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் இன்று, அப்பகுதிக்கு சென்று நிலத்தை கம்பிகளால் குத்தியும் மற்றும் எக்ஸ்ரே இயந்திரம் மூலமாகவும் சோதனையிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்











