செங்கலடி பகுதியில் காட்டு யானைகளால் ஒரே இரவில் பரவலான சேதம்




மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிஓடை மற்றும் பாலாமடு பகுதிகளில் காட்டு யானைகள் நேற்று ஒரே இரவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

மாவடிஓடைப் பகுதியில் 5 வீடுகளையும் ஒரு கடையையும் உடைத்து நாசம் செய்ததுடன், பாலாமடு பகுதியில் விவசாயிகளின் தங்குமிடமாக இருந்த 3 கொட்டகைகளையும் யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளன. மேலும், பல பயன்தரும் மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தொடர்ச்சியான காட்டு யானை தாக்குதலால் உயிர் அச்சத்தில் வாழும் மாவடிஓடை மக்கள், தமது பகுதியில் யானைகளின் பிரச்சினையை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவடிஓடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்புக்காக உடனடி தீர்வை கோருகின்றனர்.